இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Saturday, August 16, 2008

காங்கிரஸ் கட்சி சந்நியாசி மடமா?


தினகரன் நாளிதழில் இன்று வெளியாகியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டப்பேரவை கட்சி தலைவர் சுதர்சனம் ஆகியோரி பேட்டி சுவாரஸ்யமாக இருந்தது. அதை நீங்களும் படியுஙங்களேன்.

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் தேசியக் கொடியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு ஏற்றினார். நிகழ்ச்சியில், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர், தங்கபாலு, சுதர்சனம் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:

அனைத்து தரப்பு மக்களின் வாழ்விலும் ஒளி வீச பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதுதான் எங்களின் லட்சியம். தமிழகத்தை மீட்டெடுக்க தொண்டர்கள் பாடுபடவேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6வது ஊதியக் குழு பரிந்துரையை ஏற்று ஊதிய உயர்வு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் வழியை பின்பற்றி தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிருபர்களின் கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள்:

தமிழகத்தை மீட்டெடுப்போம் என்று கூறினீர்களே?

தங்கபாலு: நாங்கள் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என விரும்புகிறோம். அதற்காக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வர விரும்புவது தவறா?

திமுக கூட்டணியில் இருக்கும் போது, காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறுகிறீர்களே?

தங்கபாலு : காமராஜர் ஆட்சி அமைப்பதுதான் காங்கிரசாரின் லட்சியம். வருங்காலத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம்.

சுதர்சனம் : நாங்கள் சந்நியாசி மடம் நடத்தவில்லை. கட்சி நடத்துகிறோம். 10 பேர் கொண்ட கட்சிகள் கூட, ‘அடுத்த முதல்வர் நாங்கள்தான்’ என கூறுகிறார்கள். அவர்கள் கூறும்போது அகில இந்திய கட்சியான காங்கிரசுக்கு முதல்வர் பதவி மீது ஆசை இருக்கக் கூடாதா?

அப்படியானால் ராமதாஸ் சொன்னபடி காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமையுமா?

சுதர்சனம்: தமிழகத்தை ஆளும் தகுதி காங்கிரசுக்கு உள்ளது. ஆட்சி அமைக்க சூளுரை எடுத்துக் கொள்கிறோம்.

தங்கபாலு : தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். தொண்டர்களிடம் எழுச்சி உள்ளது. காமராஜர் ஆட்சி அமைய காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபடவேண்டும்.

இவ்வாறு அவர்கள் பதிலளித்தனர்.

Friday, August 15, 2008

ரஜினியின் சுயநலம், உதைக்க வேண்டாமா : தமிழர்

ரஜினியின் சுயநலம் குறித்து வலைபதிவர் தமிழர் தனது வலைப்பூவில் வெளியிட்டுள்ள பதிவு. நீங்களும் அதை படியுங்களேன்.


குசேலன் கர்நடாகவில் ஓடுவதற்க்காக அந்தர் பல்டி அடித்த ரஜினியை உதைக்க வேண்டாமா, இவருடைய டயலாக் எல்லாம் டைரக்டர் எழுதி கொடுக்கறதாம் இவரு அப்படியே சொல்றாராம். இதை அப்பவே முத்து படம் வந்தப்பவே சொல்றதுதானே. அப்ப மக்கள் திசை திருப்பிட்டு இப்ப அந்தர் பல்டி, ஏனா நல்லா சம்பாதிச்சிட்டார். இனி வந்தது போதும் அதனாலே மக்களை மடையனாக்கும் இவரை உதைக்க வேண்டாமா.

வினியோகதஸ்தர்கள் நட்டமடைய குடாதுன்னு மன்னிப்பு கேட்டாராம். ஏம்பா வாங்குன சம்பளத்துள 10,20% குறைத்து கொள்ளவேண்டியதுதானே. தமிழனை ஏமாற்றியதில் மீண்டும் ஒருவர். இனி ஜென்மத்துக்கும் அரசியல் அப்படின்னு பேசி படத்தை ஓட முயற்சிக்க மாட்டார்.

ரஜினியின் அனைத்து படங்களும் தோல்வி அடைய தமிழ் மக்கள் உதவி தேவை. ஐயா என்ன அறிக்கை விடறார் பார்க்கலாம்.

நடிகர்களின் சம்பள பட்டியல் : முழு விவரம் -நிருபர்

சினிமா நிருபர் என்ற பெயரில் வலைபதிவர் நிருபர் ஆகஸ்ட் 10ம்தேதி நடிகர்களின் சம்பள பட்டியலை வெளியிட்டிருக்கிறார். சினிமா ரசிகர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நிருபர் வலைப்பூவில் ஏற்கனவே நடிகைகளின் சம்பள பட்டியலை வெளியிட்டிருந்தோம். நடிகைகளில் நயன்தாரா, த்ரிஷாவைத் தவிர மற்ற நடிகைகள் அனைவரும் லட்சங்களில்தான் சம்பளம் வாங்குகிறார்கள். நடிகர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ உங்களுக்காக நடிகர்களின் சம்பள பட்டியல் முழு விவரம்:-

ரஜினிகாந்த் - ரூ.25 முதல் ரூ.40 கோடி வரை
கமல்ஹாசன் - ரூ.10 கோடி
விஜயகாந்த் - ரூ.4 கோடி
சரத்குமார் - ரூ.2 கோடி
அஜித்குமார் - ரூ.10 கோடி
விஜய் - ரூ.8 கோடி
விக்ரம் - ரூ.6 கோடி
விஷால் - ரூ.6 கோடி
சூர்யா - ரூ.6 கோடி
சிம்பு - ரூ. 4 கோடி
தனுஷ் - ரூ.4 கோடி
ஆர்யா - ரூ.3 கோடி
கார்த்தி - ரூ.3 கோடி
ஜெயம் ரவி - ரூ.3 கோடி
மாதவன் - ரூ.1.5 கோடி
சத்யராஜ் - ரூ.75 லட்சம்
பிரசாந்த் - ரூ.50 லட்சம்
பசுபதி - ரூ.30 லட்சம்

மற்ற நடிகர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார்கள்.

வி.ஜி.பி. தங்கக் கடற்கரையில் இருந்து பாலியல் தொழிலாளிகள் மீட்பு.

நுகர்வோர் நலன் என்ற வலைப்பூவில் இடம்பெற்றிருக்கும் விஜிபி கோல்டன் பீச் தொடர்பான செய்தி விரிவாகவும், சமூக அக்கறையுடனும் எழுதப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். அதை நீங்களும் படியுங்களேன்...!



கடந்த ஆகஸ்ட் 7, வியாழன் அன்று சென்னை, விபச்சார தடுப்பு காவல்துறையினருக்கு சிட்லபாக்கத்தை சேர்ந்த பூங்கா வெங்கடேசன் என்பவர் அண்டை மாநிலங்களில் இருந்து பெண்களை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் நீலாங்கரை பகுதியில் ஒரு மாருதி 800 வாகனத்தை சோதனை செய்ததில் பாலியல் தொழிலாளிகளான இரண்டு பெண்களும், திருப்பதி – சொர்லகுண்டா பகுதியைச் சேர்ந்த மணி என்ற குமார் மற்றும் கேரள மாநிலம் முன்னாரைச் சேர்ந்த ஜோஸப் ஆகிய இரண்டு பாலியல் தரகர்களும் சிக்கினர்.

இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில், அப்பெண்கள் இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகவும், மேலும் இரண்டு பெண்கள் விஜிபி தங்கக் கடற்கரை உள்ளே உள்ள விடுதி ஒன்றில் இருப்பதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண்களையும் மீட்டு மைலாப்பூரில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். பாலியல் தரகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். பூங்கா வெங்கடேசன் கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் கோலோச்சி வருவதாக விசாரணையில் தெரிய வருகிறது. ஆந்திராவிற்கு பாதுகாப்பாக தப்பி சென்றுள்ள பூங்கா வெங்கடேசனை காவல்துறையினர் "வலைவீசி" தேடி வருகின்றனர்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

நாம் அறிந்தவரை இந்தச் செய்தி வேறு எந்த செய்தி தாளிலும், இதழிலும் முழுமையாக வெளியாகவில்லை. வெளியான சில இதழ்களிலும் வி.ஜி.பி. நிறுவனத்தின் பெயருக்கு பதிலாக ஒரு தனியார் விடுதி என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் பாலியல் தொழிலாளிகளின் புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்ற நீதிமன்ற கண்டிப்பு காரணமாக இந்த செய்தியை செய்தித்துறையினர் முழுமையாகவோ, பகுதியாகவோ புறக்கணித்திருக்கலாம் என்று பலரும் நினைக்கலாம்.

ஆனால், அந்தப் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடம்தான், பல செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை புறக்கணிக்க காரணமாக இருக்கிறது என்பதே உண்மை. வி.ஜி.பி. நிறுவனம் என்பது உழைப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. "உழைத்தால் உயரலாம்" என்ற மந்திர ஸ்லோகத்தை நடைமுறையில் நிரூபித்த-நிரூபிக்கும் நிறுவனமாக அந்த நிறுவனம் மீடியா உலகத்தால் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதை மேலும் காப்பாற்றும் விதமாக - உலக அமைதி ஆலயம், மேலாண்மை பயிற்சி மையம், மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை விஜிபி நிறுவனம் நடத்தி வருகிறது.

இத்தகைய பெருமைக்குரிய ஒரு நிறுவனத்தை பாலியல் தொழிலோடு தொடர்பு படுத்துவதில் நமது மீடியா முதலாளிகளுக்கு உள்ள சிக்கல்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை வெளியிடுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பாலியல் தொழில், மனித குல வரலாற்றில் வேட்டை மற்றும் உழவுக்கு அடுத்து மிகவும் புராதனமான தொழிலாக கருதப்படுகிறது. பல நாடுகளில் பாலியல் சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களின் சில பகுதிகளில் பாலியல் தொழில் சட்டரீதியாகவே அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

பாலியல் தொழிலை கட்டுப்படுத்தும் சட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மிகப்பரவலாக விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பாலியல் தொழில் குறித்த விவாதங்களை சற்று தள்ளிவைத்துவிட்டு பார்த்தால், தொழிலதிபர்கள் குறித்து சமூகத்தில் கட்டமைக்கப்படும் பிம்பங்களே விவாதத்துக்கு உரிய அம்சமாகின்றது.

வி.ஜி.பி நிறுவனத்தினர் கடும் உழைப்புக்கு மட்டுமன்றி தமிழுக்கும் பெரும் தொண்டு செய்வதாக கூறப்படுகிறது. தமிழ்க் கவிஞர்களை விமானத்திலும், கப்பலிலும் ஏற்றி ஆழ்கடலின் மேல் மிதந்து கொண்டும், விண்வெளியில் பறந்து கொண்டும் கவியரங்கம் நடத்தி தமிழ் வளர்க்கும் கோமான்களாக இவர்கள் போற்றப்படுகின்றனர். குறுகிய காலத்தில் அதிக அளவில் கவிதைகளை எழுதும் திறன் படைத்த கவிச்சக்கரவர்த்திகளாக உருவகப்படுத்தப் படுகின்றனர். மதங்கடந்த ஆன்மிகவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.

இத்தகைய முகமூடிகள் ஏதோ வி.ஜி.பி. நிறுவனத்துக்கு மட்டுமே அணிவிக்கப்படுவதில்லை. ஏறத்தாழ அனைத்து வணிக உலக பெரும்புள்ளிகளுக்கும் இத்தகைய முகமூடிகள் அணிவிக்கப்படுகின்றன. இந்த முகமூடிகள்தான் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகைகள் ஆகியவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளல்களாக திகழ்கின்றனர். எனவே இவர்களை பகைத்துக் கொள்வதை அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ, பத்திரிகைகளோ விரும்புவதில்லை. எனவே இந்த முகமூடி மனிதர்களின் தவறுகள் அனைத்தும் மூடிமறைக்கப் படுகின்றன. அது இயலாத இடங்களில் திசைதிருப்பப் படுகின்றன. அதன் பிரதிபலனாக முகமூடி மனிதர்களின் இன்பக் கொண்டாட்டங்களில் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், செய்தி நிறுவன அதிபர்களுக்கும் பங்கும் கிடைக்கிறது.

இந்த முகமூடி மனிதர்களின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் உரிமைகள் குறித்தோ, இந்த நிறுவனங்களின் சமூகக் கடமைகள் குறித்தோ, இந்த நிறுவன தயாரிப்பு மற்றும் சேவையை பயன்படுத்தும் நுகர்வோரின் உரிமைகள் குறித்தோ பத்திரிகைகள் வாய்திறப்பதில்லை. அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ அவர்களுடைய பங்கை பெற்றுக்கொண்டு அமைதியாக இருந்துவிடுகின்றனர்.


மேற்கூறப்பட்ட சம்பவத்தில் சில கேள்விகள் எழுகின்றன.

1. பாலியல் தொழில் செய்த பெண்கள் எத்தனை நாளாக வி.ஜி.பி. விடுதியி்ல் இருந்தனர்?
2. அவர்களை அங்கே தங்க வைத்தது யார்?
3. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது வி.ஜி.பி. நிர்வாகத்தினருக்கு தெரியவே தெரியாதா?
4. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது வி.ஜி.பி. நிர்வாகத்தினருக்கு தெரிந்தும் வைத்திருந்தார்கள் என்றால், அவர்களுக்கு யார் தண்டனை வழங்குவது?
5. 15 வருடங்களாக பாலியல் தரகராக கோலோச்சிவரும் பூங்கா வெங்கடேசனின் வெற்றி ரகசியம் என்ன? அவருடைய தொழில் பங்குதாரர்கள் யார்?

கேள்விகளுக்கு முடிவே இல்லை.

மேலும் கேள்வி கேட்க விரும்பும், கேள்விகளுக்கான பதிலை அளிக்க விரும்பும் நண்பர்கள் பின்னூட்டங்களில் தொடரலாம்....!

-சுந்தரராஜன்

கண்டபடி உயரும் சென்னை வீட்டு வாடகை!! ஒரு அலசல் : கிரி

மனசாட்சி என்ற பெயரில் வலைபதிவர் கிரி கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி எழுதிய ஒரு பதிவு என்னை கவர்ந்தது. நீங்களும் அதை படியுங்களேன்...!


சென்னையில் கண்டபடி உயர்ந்து வரும் வீட்டு வாடகை அனைவரையும் கவலை கொள்ள வைத்துள்ளது, குறிப்பாக நடுத்தர மக்களையும் அரசாங்க வேலையில் உள்ளவர்களையும்.

முன்பு பேச்சலர்களுக்கு வாடகைக்கு விட மாட்டேன் என்று கூறியவர்கள், இப்போது அவர்களை தவிர மற்றவர்களுக்கு வாடகைக்கு விட யோசிக்கிறார்கள். இதற்க்கு முக்கிய காரணம் கணிப்பொறி துறையில் கிடைக்கும் அதிக சம்பளம். முக்கியமாக யாரும் அலைய தயாராக இல்லை என்பதால் 1000 அல்லது 2000 அதிகம் என்றாலும் சரி என்று ஒத்துக்கொள்ளும் மனோபாவம். நானும் கணிப்பொறி துறையில் தான் இருக்கிறேன் என்றாலும், உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டியதாக தான் இருக்கிறது.

நான்கு பேச்சலர்கள் சேர்ந்து 3000 வாடகை மதிப்புள்ள வீட்டிற்கு 1000 வீதம் 4000 கொடுக்க தயாராக இருப்பதால் இவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இன்று ஒரு வீடு வாடகைக்கு free ads அல்லது classifieds ல் வருகிறது என்றால், நம்பினால் நம்புங்கள் காலை 7 மணிக்கு பிறகு நீங்கள் அந்த எண்ணை தொடர்பு கொண்டால் அந்த வீடு முடிந்து விட்டதாக கூறுவார்கள். அந்த அளவுக்கு சென்னையில் வீடு கிடைப்பது கஷ்டம்.

கணிப்பொறி துறையில் உள்ளவர்களால் மட்டுமே வாடகை உயர்வு என்பதை ஒப்புக்கொள்ள முடியாது, சதவீதத்தில் வேண்டும் என்றால் அளவு அதிகம் இருக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து தொழில்களுமே சிறப்பாக உள்ளன, எனவே அனைவருமே அதிக பணம் கொடுத்து, அலைவதற்கு விரும்பாமல் உடனடியாக வீட்டை பிடிக்க விரும்புகிறார்கள். இதை எல்லாவற்றையும் விட தரகர்கள், இவர்களின் பங்கு விலை உயர்வுக்கு மிக முக்கியம். தங்களுக்கு கிடைக்கும் தரகு பங்கின் அளவை அதிகரிக்க இவர்களே போலியான ஒரு டிமாண்ட் ஏற்படுத்திவிடுகிறார்கள், மற்றும் வீட்டு வாடகையை உயர்த்தி விடுகிறார்கள்.

இப்பொழுது சென்னையில் 6000 குறைவாக வீடு கிடைப்பது மிக அரிது, அதுவும் பல கண்டிப்புகள் உடன் வேறு. வீடு எடுப்பது என்றால் சாதாரண விஷயம் இல்லை, ஏலம் போன்றது தான் அங்கே சென்றால் யார் அதிகம் கூறுகிறார்களோ,அவர்களுக்கே அந்த வீடு. அதிக வீட்டு வாடகை கொடுப்பது வேறு வழி இல்லை என்றாலும், கொடுக்கும் வாடைகைக்கும் அவர்கள் கொடுக்கும் வசதிகளுக்கும் சம்பந்தமே இல்லை. எந்த ஒரு வசதியும் செய்து கொடுக்காமல் கண்டபடி வாடகை வசூலிப்பது தான் பலரின் வயித்தெரிச்சலுக்கு காரணம்.

நடுத்தர மக்களின் வருமானத்தில் பாதி வீட்டு வாடைகைக்கே போய் விடுவது கசப்பான உண்மை. என்னுடைய கவலை எல்லாம் வரும் காலங்களில் இவர்கள் எப்படி இதை சமாளிக்க போகிறார்கள் என்பது. முன்பு கிண்டி என்றால் வாடகை குறைவு என்று அங்கே வீடு பார்த்தார்கள், பிறகு அது தாம்பரம் ஆனது, இப்பொழுது அங்கேயும் உயர்ந்து விட்டது. இப்படியே சென்றால் செங்கல்பட்டில் தான் வீடு பார்க்க முடியும் போல உள்ளது.

ஒருவர் ஒரு வீட்டை காலி செய்கிறார் என்றால், அடுத்து வரும் நபருக்கு அந்த வீட்டின் உரிமையாளர் 500 குறைந்தது அதிகம் சொல்கிறார். இப்பொழுது யாரையும் அதிக நாட்கள் தங்க விடுவதில்லை (அப்போது தான் வாடகையை அடிக்கடி உயர்த்த முடியும்) அப்படியே அனுமதித்தாலும் வாடகை உயர்வு முன்பு போல இல்லாமல் அதிகளவில் இருக்கும். ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பேசாமல் வீட்டை காலி செய்ய வேண்டியது தான், அடுத்த நபர் தயாராக இருக்கிறார், நீங்கள் எப்போது கிளம்புவீர்கள் என்று, எனவே வீட்டு உரிமையாளருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனவே குழந்தைகளின் பள்ளி மற்றும் அலுவலக இடம் முதலியவற்றை கருத்தில் கொண்டு அடிக்கடி மாற்ற முடியாத நடை முறை சிக்கல் இருப்பதால் அவர்கள் கேட்பதை அழுது தொலைக்க வேண்டி உள்ளது.

சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் வீட்டு வாடகை பற்றி எப்படி வேண்டும் என்றாலும் கருத்து கூறலாம், வீடு வாடகைக்கு இருப்பவர்களுக்கு மட்டுமே அதன் உண்மையான வலி தெரியும். எனக்கும் அந்த அனுபவம் இருப்பதால் கூறுகிறேன்.

இதில் அரசு தலையிட்டு இந்த வசதிகள் இருந்தால் மட்டுமே இந்த வாடகையை வசூலிக்கலாம் என்று வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும், இல்லை என்றால் இதற்க்கு விடிவு இல்லை. கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் இந்த வாடகை பிரச்சனை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என்பது என் கருத்து. கடைசியாக, கொடுப்பவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள், எனவே அரசு தலையிட்டால் மட்டுமே இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதுவரை வேற என்னங்க! பொலம்பிட்டே கொடுத்துட்டு இருக்க வேண்டியது தான் வேற வழி! எவ்வளோ பார்த்துட்டோம்! இதை பார்க்கமாட்டோமா !!

வணக்கம் நண்பர்களே...


என்னை கவரும் செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக ஆரம்பித்துள்ள இந்த வலைப்பூவிற்கு நீங்கள் ஆதரவு தருவீர்களா?

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.