இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Friday, August 15, 2008

வி.ஜி.பி. தங்கக் கடற்கரையில் இருந்து பாலியல் தொழிலாளிகள் மீட்பு.

நுகர்வோர் நலன் என்ற வலைப்பூவில் இடம்பெற்றிருக்கும் விஜிபி கோல்டன் பீச் தொடர்பான செய்தி விரிவாகவும், சமூக அக்கறையுடனும் எழுதப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். அதை நீங்களும் படியுங்களேன்...!



கடந்த ஆகஸ்ட் 7, வியாழன் அன்று சென்னை, விபச்சார தடுப்பு காவல்துறையினருக்கு சிட்லபாக்கத்தை சேர்ந்த பூங்கா வெங்கடேசன் என்பவர் அண்டை மாநிலங்களில் இருந்து பெண்களை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் நீலாங்கரை பகுதியில் ஒரு மாருதி 800 வாகனத்தை சோதனை செய்ததில் பாலியல் தொழிலாளிகளான இரண்டு பெண்களும், திருப்பதி – சொர்லகுண்டா பகுதியைச் சேர்ந்த மணி என்ற குமார் மற்றும் கேரள மாநிலம் முன்னாரைச் சேர்ந்த ஜோஸப் ஆகிய இரண்டு பாலியல் தரகர்களும் சிக்கினர்.

இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில், அப்பெண்கள் இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகவும், மேலும் இரண்டு பெண்கள் விஜிபி தங்கக் கடற்கரை உள்ளே உள்ள விடுதி ஒன்றில் இருப்பதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண்களையும் மீட்டு மைலாப்பூரில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். பாலியல் தரகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். பூங்கா வெங்கடேசன் கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் கோலோச்சி வருவதாக விசாரணையில் தெரிய வருகிறது. ஆந்திராவிற்கு பாதுகாப்பாக தப்பி சென்றுள்ள பூங்கா வெங்கடேசனை காவல்துறையினர் "வலைவீசி" தேடி வருகின்றனர்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

நாம் அறிந்தவரை இந்தச் செய்தி வேறு எந்த செய்தி தாளிலும், இதழிலும் முழுமையாக வெளியாகவில்லை. வெளியான சில இதழ்களிலும் வி.ஜி.பி. நிறுவனத்தின் பெயருக்கு பதிலாக ஒரு தனியார் விடுதி என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் பாலியல் தொழிலாளிகளின் புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்ற நீதிமன்ற கண்டிப்பு காரணமாக இந்த செய்தியை செய்தித்துறையினர் முழுமையாகவோ, பகுதியாகவோ புறக்கணித்திருக்கலாம் என்று பலரும் நினைக்கலாம்.

ஆனால், அந்தப் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடம்தான், பல செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை புறக்கணிக்க காரணமாக இருக்கிறது என்பதே உண்மை. வி.ஜி.பி. நிறுவனம் என்பது உழைப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. "உழைத்தால் உயரலாம்" என்ற மந்திர ஸ்லோகத்தை நடைமுறையில் நிரூபித்த-நிரூபிக்கும் நிறுவனமாக அந்த நிறுவனம் மீடியா உலகத்தால் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதை மேலும் காப்பாற்றும் விதமாக - உலக அமைதி ஆலயம், மேலாண்மை பயிற்சி மையம், மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை விஜிபி நிறுவனம் நடத்தி வருகிறது.

இத்தகைய பெருமைக்குரிய ஒரு நிறுவனத்தை பாலியல் தொழிலோடு தொடர்பு படுத்துவதில் நமது மீடியா முதலாளிகளுக்கு உள்ள சிக்கல்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை வெளியிடுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பாலியல் தொழில், மனித குல வரலாற்றில் வேட்டை மற்றும் உழவுக்கு அடுத்து மிகவும் புராதனமான தொழிலாக கருதப்படுகிறது. பல நாடுகளில் பாலியல் சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களின் சில பகுதிகளில் பாலியல் தொழில் சட்டரீதியாகவே அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

பாலியல் தொழிலை கட்டுப்படுத்தும் சட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மிகப்பரவலாக விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பாலியல் தொழில் குறித்த விவாதங்களை சற்று தள்ளிவைத்துவிட்டு பார்த்தால், தொழிலதிபர்கள் குறித்து சமூகத்தில் கட்டமைக்கப்படும் பிம்பங்களே விவாதத்துக்கு உரிய அம்சமாகின்றது.

வி.ஜி.பி நிறுவனத்தினர் கடும் உழைப்புக்கு மட்டுமன்றி தமிழுக்கும் பெரும் தொண்டு செய்வதாக கூறப்படுகிறது. தமிழ்க் கவிஞர்களை விமானத்திலும், கப்பலிலும் ஏற்றி ஆழ்கடலின் மேல் மிதந்து கொண்டும், விண்வெளியில் பறந்து கொண்டும் கவியரங்கம் நடத்தி தமிழ் வளர்க்கும் கோமான்களாக இவர்கள் போற்றப்படுகின்றனர். குறுகிய காலத்தில் அதிக அளவில் கவிதைகளை எழுதும் திறன் படைத்த கவிச்சக்கரவர்த்திகளாக உருவகப்படுத்தப் படுகின்றனர். மதங்கடந்த ஆன்மிகவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.

இத்தகைய முகமூடிகள் ஏதோ வி.ஜி.பி. நிறுவனத்துக்கு மட்டுமே அணிவிக்கப்படுவதில்லை. ஏறத்தாழ அனைத்து வணிக உலக பெரும்புள்ளிகளுக்கும் இத்தகைய முகமூடிகள் அணிவிக்கப்படுகின்றன. இந்த முகமூடிகள்தான் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகைகள் ஆகியவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளல்களாக திகழ்கின்றனர். எனவே இவர்களை பகைத்துக் கொள்வதை அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ, பத்திரிகைகளோ விரும்புவதில்லை. எனவே இந்த முகமூடி மனிதர்களின் தவறுகள் அனைத்தும் மூடிமறைக்கப் படுகின்றன. அது இயலாத இடங்களில் திசைதிருப்பப் படுகின்றன. அதன் பிரதிபலனாக முகமூடி மனிதர்களின் இன்பக் கொண்டாட்டங்களில் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், செய்தி நிறுவன அதிபர்களுக்கும் பங்கும் கிடைக்கிறது.

இந்த முகமூடி மனிதர்களின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் உரிமைகள் குறித்தோ, இந்த நிறுவனங்களின் சமூகக் கடமைகள் குறித்தோ, இந்த நிறுவன தயாரிப்பு மற்றும் சேவையை பயன்படுத்தும் நுகர்வோரின் உரிமைகள் குறித்தோ பத்திரிகைகள் வாய்திறப்பதில்லை. அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ அவர்களுடைய பங்கை பெற்றுக்கொண்டு அமைதியாக இருந்துவிடுகின்றனர்.


மேற்கூறப்பட்ட சம்பவத்தில் சில கேள்விகள் எழுகின்றன.

1. பாலியல் தொழில் செய்த பெண்கள் எத்தனை நாளாக வி.ஜி.பி. விடுதியி்ல் இருந்தனர்?
2. அவர்களை அங்கே தங்க வைத்தது யார்?
3. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது வி.ஜி.பி. நிர்வாகத்தினருக்கு தெரியவே தெரியாதா?
4. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது வி.ஜி.பி. நிர்வாகத்தினருக்கு தெரிந்தும் வைத்திருந்தார்கள் என்றால், அவர்களுக்கு யார் தண்டனை வழங்குவது?
5. 15 வருடங்களாக பாலியல் தரகராக கோலோச்சிவரும் பூங்கா வெங்கடேசனின் வெற்றி ரகசியம் என்ன? அவருடைய தொழில் பங்குதாரர்கள் யார்?

கேள்விகளுக்கு முடிவே இல்லை.

மேலும் கேள்வி கேட்க விரும்பும், கேள்விகளுக்கான பதிலை அளிக்க விரும்பும் நண்பர்கள் பின்னூட்டங்களில் தொடரலாம்....!

-சுந்தரராஜன்

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.